விதி என்றால் கொடுப்பினை;
மதி என்றால் தசாபுத்தி;
கதி என்றால் கோச்சாரம் ஆகும்..
ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது.
மதி என்றால் சந்திரன்/நிலவு
ஒரு ஜாதகர் பிறந்த பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருந்ததோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக வரும். ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) தசை தான் ஆரம்ப தசையாக வரும். இதனை தொடர்ந்து மற்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தன் தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசாபுத்தியை தான் "மதி" என்று சுருக்கமாக நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்..
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிகளை (நிலைகளை) பற்றி தெரிவிப்பது தான் கோச்சாரம் ஆகும். இந்த கோச்சாரத்தை தான் கதி என்று நம் முன்னோர்கள் சுருக்கமாக கூறி வந்தார்கள்..
இப்பொழுது திருமண வாழ்க்கையை ஓர் உதாரணமாக முன்வைத்து; ஜோதிடத்தில் கொடுப்பினை, தசாபுத்தி, கோச்சாரம் ஆகிய இம்மூன்றும் ஜோதிடத்தில் எந்த அளவு முக்கியத்துவத்தை பெறுகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறேன்.
ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான கொடுப்பினையை நிர்ணயிப்பது அவர் ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவம், களத்திர காரகன் சுக்கிரன்/செவ்வாய், லக்ன பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் ஆகும். களத்திரம் என்றால் கணவன் அல்லது மனைவி என்பது பொருள்.. அதாவது வாழ்க்கை துணை என பொருள் கொள்ளலாம். மேலும் களத்திர காரகன் என்றால் வாழ்க்கை துணையை பற்றி குறிக்கும் கிரகம் ஆகும்.
ஜோதிடத்தில் சுக்கிரன் பெண் கிரகமாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் அழைக்கப்படுகிறது. அதனால் தான் ஜோதிடத்தில் ஒரு ஆண் ஜாதகருக்கு சுக்கிரன் களத்திர காரகராகவும்; பெண் ஜாதகருக்கு செவ்வாய் களத்திர காரகராகவும் வருகிறார்கள்.
இனி, ஒரு ஆண் ஜாதகரை மையமாகக் கொண்டு விளக்கங்களை தொடருகிறேன்.
பொதுவாக ஜோதிடத்தில் 8-ம் பாவம் என்பது வலி, வேதனை, அவமானம் போன்ற காரகங்களையும், 12-ம் பாவம் என்பது இழப்பு, விரையம், தோல்வி போன்ற காரகங்களையும் உடையதாகும். அடுத்து களத்திர ஸ்தானமான 7-ம் பாவத்தை கெடுக்கக் கூடிய ஆற்றல் 7-க்கு 12-ம் பாவமான 6-ம் பாவத்திற்கு உண்டு. ஆதலால் 6,8,12 போன்ற பாவங்கள் திருமண வாழ்க்கைக்கு எதிரான பாவங்களாகும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவ ஆரம்ப முனையின் உப மற்றும் உபஉப நட்சத்திர அதிபதிகளையும்; சுக்கிரனையும் ஆய்வு செய்தால் அந்த ஜாதகருக்கு அமையக் கூடிய மனைவியின் தோற்றம், குணம், தனநிலை போன்றவற்றையும் திருமண வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஆண் ஜாதகத்தில் இந்த 7-ம் பாவமும், சுக்கிரனும் எந்த காரணத்தை கொண்டும் வலுவிழக்கக் கூடாது. 7-ம் பாவம் வலுவிழந்து பாதிக்கப்பட்டால் திருமண வாழ்க்கை அமைவதில் ஆரம்பத்தில் சில தடைகள் வரக்கடும். பொதுவாக 7-ம் பாவம் என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் சந்திக்கக் கூடிய தமக்கு சமமான நபர்களையும் குறிக்கும். 7-ம் பாவம் மட்டும் பாதிக்கப்பட்டு; களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகர் தான் சந்திக்கும் சமூகத்தினரிடம் அவ்வப்போது சில பிரச்சனைகளை எதிர்கொள்வாரே தவிர திருமண வாழ்க்கை என்பது சிறப்பானதாக இருக்கும். ஒரு வேளை சுக்கிரன் பாதிக்கப்பட்டு, என்ன தான் 7-ம் பாவம் வலுவாக இருந்தாலும், ஜாதகர் தன் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேற்கண்ட இரண்டும் (7-ம் பாவம், சுக்கிரன்) பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கை என்பது சற்று யோசிக்க கூடிய விஷயமாக ஆகிவிடும். இங்கே மற்ற காரணிகளான லக்ன பாவத்தையும், ஒன்பதாம் பாவத்தையும் ஆய்வு செய்வது அவசியம்.
லக்ன பாவம் என்பது ஒரு ஜாதகரின் சுயமுயற்சி, குணம், ஈடுபாடு மற்றும் அவர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோகங்களை பற்றி தெரிவிக்கும். இல்லற வாழ்க்கையை எப்படியும் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியுமா என்பது லக்ன பாவத்தை ஆய்வு செய்வதன் மூலம் தெரியவரும்.
9-ம் பாவம் என்பது தெய்வத்தை குறிக்கின்ற பாவமாகும். தெய்வ அனுக்கிரகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை அறிய இந்த பாவத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
7-ம் பாவமும், சுக்கிரனும் பாதிக்கப்படும் பொழுது; ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை அனுபவிக்கும் யோகமும், தெய்வ அனுக்கிரகமும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இவ்விரு பாவங்களையும் ஆய்வு செய்வது அவசியமானது என்பதே நான் இங்கே கூற வந்த கருத்து..
ஒரு வேளை இந்த லக்ன பாவமும், 9-ம் பாவமும் திருமணத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட திருமணம் என்பது உடனடியாக (பருவ வயதில்) நடைபெறாது. இவ்விரு பாவங்களும் நன்றாக இருந்தாலும் கூட; முக்கியமான காரணிகளான 7-ம் பாவமும் சுக்கிரனும் கெட்டுவிட்டதால் மிகுந்த கால தாமதத்திற்கு பின்னரே நடைபெறும். இங்கே ஜாதகர் ஆண் என்பதால் 33 அல்லது 35 வயதிற்கு மேல் திருமணம் ஆகும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் மாறாக 7-ம் பாவம் மற்றம் சுக்கிரனை போல் இந்த லக்ன மற்றும் 9-ம் பாவமும் சேர்ந்து திருமணத்திற்கு எதிரான பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டிருந்தால் திருமண வாழ்க்கையே அமையாது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. என்னை பொருத்த வரை, இது போன்ற அமைப்புடைய ஜாதகர்களுக்கு திருமண பேச்சே எடுக்காமல் இருப்பது நல்லது.
காரணம் விதி கொடுப்பினை (7-ம் பாவம், சுக்கிரன், லக்ன பாவம், 9-ம் பாவம்) என்பது திருமண வாழ்க்கையை முழுவதுமாக தடுக்கிறது. மதி என்கிற தசாபுத்தி என்ன தான் வலுவாக இருந்தாலும் திருமணம் கைகூடுவது போல் தெரியும் ஆனால் கைகூடாது. இது போன்ற ஜாதகங்களுக்கு மீறி திருமணம் நடந்து 3 மாதத்திற்குள் விவாகரத்து ஆனாலும் அதில் ஆச்சிரயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு ஆணின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பொருத்த வரை....
விதி என்கிற கொடுப்பினை வலுவாக இருந்து; மதி என்கிற தசாபுத்தியும் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு பருவ வயதிலேயே திருமணம் நடைபெறும். மேலும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்பதற்கே இடமிருக்காது. தம்பதிகளுக்குள் அன்யோன்யம் என்பது மிக அதிகமாக காணப்படும்.
கொடுப்பினை வலுவாக இருக்கும் பட்சத்தில்; தசாபுத்தி வலுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிதளவு ஒத்துழைப்பு கொடுத்தாலே (மத்திமமாக இருந்தாலே) போதும். திருமண வாழ்க்கை சரியான பருவத்தில் அமைந்து ஓரளவு மகிழ்ச்சிக்குரியதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.
கொடுப்பினை வலுவாக இருந்து; தசாபுத்தி பாதகமான நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அதாவது அந்த மோசமான தசாபுத்தி காலங்களின் போது மட்டும் தடை ஏற்பட்டு பின்பு நல்ல தசா புத்திகள் வரும் பொழுது திருமணம் கைகூடி மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கையாக அமையும். விதி என்னதான் நன்றாக இருந்தாலும் மதி என்கிற தசாபுத்தி சிறிதளதாவது கைக்கொடுக்க வேண்டும்.
கொடுப்பினை மத்திமமாக இருக்கும் பட்சத்தில்; தசாபுத்தி வலுவாக இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறது. அதாவது இங்கே மதி என்கிற தசாபுத்தி திருமண வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். இல்லையெனில் திருமணம் தள்ளி போகவோ, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரவோ வாய்ப்பு உள்ளது..
கொடுப்பினை மறுக்கப்படும் பொழுது (மோசமான விதி) என்ன தான் தசா புத்திகள் வலுவாக அமைந்தாலும் திருமண வாழ்க்கை என்பது காணல் நீர் போல தான். அப்படி மீறி நடந்தாலும் தசாபுத்திகள் மாறும் பொழுது திருமண வாழ்க்கை என்பது நரகமாக மாறும். விவாகரத்து வரை கூட சென்று விடும்.
கொடுப்பினை தசாபுத்தி ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டால் திருமணமே நடைபெறாது என்பதை உறுதியாக கூற முடியும்.
இது வரை விதி மற்றும் மதியை ஒப்பிட்டு விளக்கம் கூறி வந்தேன். அடுத்து கதி என்ற கோச்சாரத்தை இவ்விரண்டுடன் ஒப்பிட்டு அதனின் முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம்..
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல பொதுவாக சார ஜோதிட முறைப்படி 6,8,12 போன்ற பாவங்கள் திருமண வாழ்க்கையை எதிர்க்கின்ற பாவங்களாகும்.
ஒரு பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் அந்த பாவ ஆரம்பமுனையின் உப நட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்திற்கே வலிமை அதிகம்.
ஒரு ஜாதகத்தில் வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோர்கள் 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வந்தால் கோச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் மேற்சொன்ன கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 15 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
ஆனால், மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி ஆகியோர்கள் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 4 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை எடுத்துக் கொள்வார்கள். ஆதலால் நடைமுறை வாழ்க்கையில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய நான்கு கிரகங்களில் ஏதெனும் ஒன்று; ஒரு ஜாதகத்தில் 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வந்து கோச்சாரத்தில் 6 அல்லது 8 அல்லது 12-ம் பாவ உபநட்சத்திர அதிபதியின் (திருமண வாழ்க்கையை எதிர்க்கின்ற கிரகங்களின்) நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலகட்டங்களில் திருமணத்திற்கு உண்டான காரியங்களில் ஈடுபடும் போது ஓரு சில தடையை ஏற்படுத்தும். இந்த தடை என்பது தற்காலிகமாக தான் இருக்குமே தவிர கொடுப்பினை மற்றும் தசாபுத்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது.
உதாரணத்திற்கு, திருமணத்திற்கு வரன் பார்க்கின்ற வேளையில் எதிர்பாலினர் வீட்டில் சம்மதம் தெரிவித்தும் ஒரு சில காரணங்களுக்காக வரும் வரன்களை வேண்டாம் என்று தட்டி கழிப்பது, திருமண தேதியை உறுதி செய்த பின்பு சில காரணங்களுக்காக மீண்டும் தள்ளி போவது, திருமணம் சம்பந்தமான பேச்சுக்கள் எல்லாம் முடிந்த பின்னரும் சில காரணங்களுக்காக திருமண தேதியை உறுதி செய்யாமல் காலம் தாமதம் ஏற்படுவது போன்றவை உண்டாகும்.
இது போன்று சிறிய தடைகள் தான் கோச்சாரத்தால் ஏற்படுமே தவிர கொடுப்பினையும், தசாபுத்தியும் நன்றாக இருக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பினை உண்டாக்காது.
ஒரு ஜாதகத்தின் பலனை 70% கொடுப்பினையும், 25% தசாபுத்தியும், 5% கோச்சாரமும் நிர்ணயிக்கின்றது எனக் கூறி இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.